07/05/2017
தூத்துக்குடியில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தகுமார், இணை இயக்குனர் நலப்பணிகள் லதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது;–
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இடையே ஏற்படும் இறப்புகளில் தோராயமாக 13 சதவீதம் அதாவது 3 லட்சம் இறப்புகள் வயிற்றுப்போக்கின் காரணமாக ஏற்படுகின்றது. வயிற்றுபோக்கு 40 சதவீதம் ‘ரோட்டா‘ வைரஸ் கிருமி தொற்றினால் ஏற்படுகின்றது. ஒரு வருடத்தில் தோராயமாக 32.7 லட்சம் குழந்தைகள் புற நோயாளிகளாகவும், 8.72 லட்சம் குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் இந்த தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்காக சிகிச்சை பெறுகின்றனர். வயிற்றுப்போக்கின் தாக்கம் மற்றும் இறப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்.
அதன்படி ‘ரோட்டா‘ வைரஸ் மற்றும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பு மருந்துகள் அளித்தல், தனிமனித மற்றும் சுற்றுப்புறத்தில் சுகாதாரம், தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல், குழந்தைக்கு உணவூட்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்து அளித்தல் மற்றும் வைட்டமின்–ஏ திரவம் அளித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளையும் உப்பு கரைசல் அளித்தல் மற்றும் துத்தநாக மாத்திரை அளித்தல் ஆகிய சிகிச்சை முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சொட்டு மருந்து
இந்தியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து படிப்படியாக கொடுக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்த தடுப்பு மருந்து அரியானா, இமாசலபிரதேசம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 2–ம் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த மருந்து 3 தவணைகளாக சொட்டு மருந்தாக கொடுக்கப்படும். ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து நாளை (சனிக்கிழமை) முதல், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஒரு வயதிற்கு உட்பட்ட 22 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள்.
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online